கத்திரிக்காய் வைத்து மணக்க மணக்க மசாலா குழம்பு! ரெசிபி இதோ…

கத்திரிக்காய் வைத்து என்னதான் விதவிதமாக குழம்பு வகைகள் செய்தாலும் எளிதில் சமைக்க கூடிய காய்கறிகளில் ஒன்றாக இருப்பதால் மீண்டும் புதுவிதமான ரெசிபிகள் முயற்சி செய்வதில் ஆர்வம் அதிகம் தான். இந்த முறை பிஞ்சு கத்திரிக்காய் வைத்து எப்பொழுதும் எண்ணெய் மிதக்கும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வதற்கு பதிலாக சற்று வித்தியாசமாக மசாலா குழம்பு செய்வதற்கான விளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…

முதலில் இந்த குழம்பு செய்வதற்கு தேவையான மசாலா பொருட்களை தயார் செய்து கொள்ளலாம். அதற்காக ஒரு அகலமான கடாயில் இரண்டு தேக்கரண்டி மல்லி, இரண்டு துண்டு பட்டை, ஐந்து கிராம்பு, இரண்டு ஏலக்காய், ஒரு தேக்கரண்டி மிளகு, அரை தேக்கரண்டி வெந்தயம், மூன்று தேக்கரண்டி வேர்க்கடலை, இரண்டு காய்ந்த வத்தல் சேர்த்து நல்ல வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக அரை கப் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளலாம். அடுத்து ஒரு தேக்கரண்டி வெள்ளை எள், அரை தேக்கரண்டி கசகசா சேர்த்து கலந்து கொடுத்து அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்பொழுது நாம் வருத்த பொருட்களை சிறிது நேரம் ஆற வைத்துக் கொள்ளலாம்.

அதன் பிறகு இவை அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனுடன் அரை தேக்கரண்டி கல்லுப்பு சேர்த்து கொரகொரப்பாக பொடி செய்து கொள்ளலாம். இப்பொழுது நமக்கு தேவையான கத்திரிக்காய் நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

கத்தரிக்காய் நான்காக கீரி அதன் நடுப்பகுதியில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் மசாலா பொருட்களை நன்கு உள்ளே சேரும் விதத்தில் தடவிக்கொள்ள வேண்டும். அடுத்து ஒரு மண்சட்டி அல்லது ஒரு அகலமான கடாய் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடுபடுத்திக் கொள்ளலாம்.

நல்லெண்ணெய் சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி சீரகம், இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இதில் நாம் மசாலா தடவிய கத்திரிக்காய் அப்படியே சேர்த்துக் கொள்ளலாம்.. இதனுடன் அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து மூடி போட்டு பத்து நிமிடம் எண்ணெயில் வேக வைக்க வேண்டும்.

மதுரை ஸ்பெஷல் கருப்பட்டி பருத்திப்பால் வைத்து அல்வா ரெசிபி!

பத்து நிமிடம் கழித்து கத்திரிக்காவில் தடவியது போக மீதி இருக்கும் மசாலாவையும் கடாயில் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் சிறிய எலுமிச்சை பழம் அளவு புளிக்கரைசல் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளலாம். இப்பொழுது இந்த குழம்பை மூடி போட்டு மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

குழம்பு நன்கு கொதித்து கெட்டி பதத்திற்கு வரும் பொழுது அடுப்பை அணைத்து விட வேண்டும். இறுதியாக கைப்பிடி அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி கலந்து கொடுத்து இறக்கினால் சுவையான கத்திரிக்காய் மசாலா தயார். சூடான சாதத்தில் இந்த மசாலா சேர்த்து கலந்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.

Exit mobile version