சாதம் மற்றும் தோசைக்கு கச்சிதமாக பொருந்தும் தக்காளி வைத்து அருமையான புளிக்குழம்பு!

ஒரு நேரம் குழம்பு சமைத்து இரண்டு முறை பயன்படுத்த விரும்புபவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் பயனாக இருக்கும். அதாவது மதியம் சாதத்திற்கும் இரவு இட்லி அல்லது தோசைக்கு ஒரே விதமாக சமைக்க நினைப்பவர்கள் இந்த தக்காளி குழம்பு தாராளமாக முயற்சி செய்யலாம். தக்காளி அதிகமாக கிடைக்கும் பொழுதும் இது போன்ற குழம்பு வகைகள் செய்து எளிமையான முறையில் அசத்தலாம் வாங்க.

முதலில் ஒரு மண்சட்டி அல்லது கடாய் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். நல்லெண்ணெய் சூடானதும் அரை தேக்கரண்டி வெந்தயம், அரை தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, 5 வெள்ளை பூண்டு, இரண்டு காய்ந்த வத்தல், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக பொடியாக நறுக்கிய 20 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். வெங்காயம் நன்கு பொன்னிறமாக மாறி வரும் நேரத்தில் பொடியாக நறுக்கிய மூன்று தக்காளி பழங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும். தக்காளி வதக்கும்போது இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

தக்காளி நன்கு மசிந்து வரும் நேரத்தில் இரண்டு தேக்கரண்டி குழம்பு மிளகாய் தூள் அல்லது சாம்பார் தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

ரெஸ்டாரண்டுகளில் மட்டுமே கிடைக்கும் ஜாப்பனீஸ் பிளாப்பி ஆம்லெட்! ரெசிபி இதோ..

குழம்பு நன்கு கொதித்து வரும் நேரத்தில் எலுமிச்சை பழ அளவு ஊறவைத்த புளி கரைசல் சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் சேர்த்த பிறகு குழம்பு 10 நிமிடம் வரை நன்கு கொதிக்க வேண்டும். அதை அடுத்து ஒரு தேக்கரண்டி நாட்டுச்சர்க்கரை சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும். இறுதியாக இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான தக்காளி குழம்பு தயார்.

இந்த குழம்பு சூடான சாதத்திற்கு மட்டுமின்றி இட்லி மற்றும் தோசைக்கு சாப்பிடவும் கச்சிதமான பொருத்தமாக இருக்கும்.